Monday, January 8, 2018

நூல் கொலை

எத்தனை பேரைக் கொலை செய்வாள் அவள்?
படிப்பு ஒன்றே வாழ்க்கை என்று சொன்ன அப்பனை
பெரிய கனவுகளைத் தின்று ஊட்டிய அண்ணனை
அவள் சுடர் வாங்கி ஓடக் காத்திருந்த இளம் திரிகளை
பாதி வரை ஆட்டத்தில் சேர்க்காத மனுவின் பிரதிகளை
ஓடிய கால்களை இடறிய தந்திரப் புனிதர்களை
தூண்டில் திருடும் கஞ்சி வேட்டிப் புழுக்களை
செய்தித்தாள்களில் அழுது மறக்கும் என்னை உன்னை
மாற்றுப் பாதையில் அலுவலகம் சேரும் உன்னை என்னை
இன்னும் இன்னும் இன்னும்……
நாற்கரச் சாலைகளையொத்த நீண்ட பட்டியல்
அவளுக்குத் தெரிந்ததை மட்டும் செய்து வந்தாள்
இன்று
அவளால் இயன்றதை மட்டுமே செய்தாள்
ஆம்
அவளால் அத்தனை பேரையும் கொல்ல முடியாது.


நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 05-செப்டம்பர்-2017

No comments:

Post a Comment