அவளுக்கு
எண்களைப் பிடிப்பதில்ல
எண்ணிக்கையில்
எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை
பிறந்த
தேதிகளும் நினைவிலிருப்பதில்லை
செங்கோடையில்
பிறந்தவன் நீ
தண்பனியில்
பிறந்தவள் நான் என்பாள்
அவள் மச்சங்களை நான் எண்ணுகையில்
பறவைகள்
நட்சத்திரங்களை எண்ணுவதில்லை என்பாள்
அந்த நீண்ட முத்தத்தின் பின்
இருபது
நிமிட முத்தம் என்றேன்
மழையைத்
துளிகளால் அளக்காதே என்றாள்
எத்தனை
நாட்கள் தனித்திருந்தோம்?!
என்ற என் ஆயாசக் கேள்விக்கு
நமக்கிடையே
ஓங்கிப் பெருத்த மரம் இருந்தது
எனச் சொல்லிய அவள் பெருமழையானாள்.
பறவை உயரே பறக்கத் தொடங்கியது.
ஒரு விதையாய்ச் சுழிந்து ஒடுங்கியது
எண்களின்
மரம்.
{டிசம்பர் மாத
அச்சாரம் இதழில் பிரசுரமானது}
எழுதிய நாள் :
20-நவம்பர்-2017
No comments:
Post a Comment