Tuesday, December 29, 2009

மனிதம்

சாலை கடந்த நாயை
அடித்து எறிந்து க‌டந்தது
வாக‌ன‌த்தில் மிருக‌ம்,
செத்து விழுந்த‌து
ம‌னித‌ம்.

Thursday, December 24, 2009

ஜன்னல் காற்று

எப்போதாவது கிடைக்கும்
ஜன்னலோரப் பயணத்தில்
காத்திருக்கும் காகிதங்களிடமிருந்து
என் கவிதைகளை
எப்போதும் போல்
பிடுங்கிச் சென்றுவிடுகின்றது
ஜன்னலுக்கு வெளியே
நகர்ந்து செல்லும்
காற்றுலகம்.

Tuesday, December 22, 2009

ஒளி விலகல்

பாதையோர அனுமனைக்
குவியும் பார்வை
பிச்சைத் துண்டின்
சில்லறையாய்
சிதறிக் கிடந்தலையும்
குட்டைப் பாவாடை
விசிறிச் சென்ற
சிறு காற்றில்.

Wednesday, December 16, 2009

பேனா மயக்கம்

தூளிக் குழந்தை
இமை மூட‌
கூடமெங்கும்
மனைவியின் தாலாட்டு வரிகள்,
கவிஞனின் கையில்
வெற்றுக் காகிதம்.

தொடக்கப்புள்ளி



அடம் செய்யும்
குழந்தையை நோக்கிய
முதல் மிரட்டல்,
வன்முறையின்
முதல் துளி.

Friday, November 6, 2009

நான், நட்சத்திரம் மற்றும் நம் காதல்


மின்னஞ்சல், தொலையழைப்பு
குறுஞ்செய்தி ஏதுமற்ற
ஏழு நாட்களின்
பின்னொரு நாளின் சந்திப்பை
சோடியம் விளக்குகள்
மரித்திருந்த பின் மாலைப்பொழுதில்
காத்திருந்தேன் நான்.

பேருந்து நிறுத்தத்தில்
சிந்திக் கிடந்த
இலையுதிர்க் காலத்தின் மீது
நீந்தித் திரிந்தது வானத்து நிலா.

வந்து நின்று போகும்
வாகனம் அனைத்திலும்
அளைந்து மீண்டது
காதல் சுமந்த-என்காத்திருப்பு.

என்னோடு வந்தமர்ந்த
தனிக்காகம் ஒன்று
இணை கண்டு கிளைமாறிய
காதல் கணத்தில்
வந்திறங்கினாய் நீ.

எட்டுமணி நேர அலுவல்
கீறிடாப் புதுமலராய்
எனக்குப்பிடித்த மஞ்சளுடையில் நீ.
சென்ற முறை புறங்கையில் நீ
முத்தமிட்டதைப் பார்த்த நட்சத்திரம்
மேகம் விலக்கிக் கண்ணடித்தது
இப்போது.

"எப்படி இருக்கிறாய் மலர்?"
நகை புகையும் காதல்
வழிந்த என் கேள்விக்கு
சூளையில் சுட்டெடுத்த
உன் பதில் மொழி கேட்டுச்
சிரித்தது அந்தக் காதல் நட்சத்திரம்...
"நான் உன்னைப் பார்க்க வரலை"
நானும் நம் காதலும் சேர்ந்து கொண்டோம்
அந்த நட்சத்திரச் சிரிப்பில்.

நிலையறிதல்

மனிதர்களை
மனிதர்களாய்
மாற்றுகிறவர்கள் மனிதர்களே;
குழந்தைகள் உருவத்தில்
இருக்கிறார்கள்.

Tuesday, March 24, 2009

அவள்

பாடல்களால் நனைந்து
கிடக்கின்றன நாட்கள்;
தினம் தினம் பாடல்கள்..
செவி கடந்தும்,
மனம் பிடித்தும்,
புதியன,
பழையன,
பழையனவாய்த் தோன்றும்
புதியன,
தேநீர்க் கடைகளில்,
வைபவக் கலகலப்பில்...


தினம் தினம் பாடல்கள்.
இசைக்காய் சிலவும்
வரிகளுக்காய் சிலவும்
மனம் படியும் பாடல்கள்.
எத்தனை இருந்தும்
நினைத்த கணம்-இதழ்
நனைக்கும் புன்னகை தருவது
இசையும் ராகமும்
புரியாத வயதில்
மனம் படிந்த
அந்தப் பாடல் தான்.

மருந்து

கடற்கரையிலும்
பூங்காக்களிலும்
உடற்பயிற்சிக்காய்
எஜமானிகள்;
வீடுகளில்
வேலைக்காரிகள்.

Friday, February 20, 2009

ஞான‌த்த‌ங்க‌மே!

ஜன்னல் வழி
கடந்து செல்லும்
கற்கடவுள்களுக்கெல்லாம்
கன்னத்தில்
போட்டுக்கொண்டவனுக்கு
தெரியவேயில்லை
பக்கத்தில் நின்று கொண்டிருந்த
வயதான கடவுளை!

என்ன சொல்கிறாய்???


உன் கொலுசுச் சத்தம்
எனக்குப் பிடிக்கும்
என்பதால்- நீ
இப்போதெல்லாம்
என் முன்னால் நடப்பதேயில்லை…

உன் வீட்டுப்
பன்னீர்ப்பூக்களை நான்
ரசித்ததால்- அதன்
வேருக்கு
வெந்நீர் ஊற்றியவள் நீ
என் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்கிறாய்?

நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும்போது
நீயோ
சூரியனை உதயமாக்கி விடுகிறாய்;
என் கனவுகள் மட்டும்
அந்தரத்திலேயே
அஸ்தமித்து விடுகின்றன…

உன் பாதம்
கெட்டுப்போகாதிருக்க- நான்
பட்டுப்பூக்களை விரித்தேன்
ஆனால்
என் நினைவுகள்
கெட்டுப்போகவேண்டும்
என்பதற்காக
நீ
அமிலத்திலும் நடக்கத்
தயாராக இருக்கிறாய்.

உன் நினைவுகளை
மட்டும்
சுவாசித்த
என் நுரையீரல்
எடுத்து மருத்துவம் படிக்கிறாய்
என்
நெஞ்சுக்குள்
இப்போது மூச்சடைப்பு.

நான் என்ன
செய்தேன் உனக்கு?
நான் சாம்பலாக
வேண்டுமென்பதற்காக‌
நீயே எரிவதற்குத் தயாராகிறாய்?

சொல் தோழி,
பிளந்து கிடக்கும்
என் இதயக்காட்டில்
உன் பார்வைத்தூறல்
பட்டுவிட என்னை
என்ன செய்யச்சொல்கிறாய்???

மரத்துப்போய்…

மரங்கொத்திப் பறவையாய்
உன் நினைவுகள்,
மரத்துப்போன மரமாய்
என் இதயம்!

ஞாபகம்

சாலைத்தாரில்
ஒட்டிக்கிடக்கும் மிருகத்தோல்;
காணாமல் போன
வீட்டு நாயின் நினைவுகள்.

வானம்

முன் காரின் சொகுசு,
பக்கத்து கண்னாடி முகம்
மாத பட்ஜெட்,
அலுவலக உளைச்சல்;
சிக்னலின் சிவப்புக்கும்
பச்சைக்குமிடையில்
வந்து வந்து போகும்
சிந்தனைச்சிலந்திகளால்
தலை மேல்
ஆகாயத்தின் விசாலம்
எப்போதும் தெரிவதில்லை…

மத‌ம்

“மேரி சவுண்ட் சர்வீஸ்”
முழங்க‌
“காதர் பாத்திரங்கள்”
பந்தி பறிமாற‌
உமாவும் சங்கரனும்
தாலி கட்டிக்கொண்டார்கள்!

ஏனோ….

காரணம் அறியாமலே
மனம் கவலை சுமக்கிறது,
சாலையில்
ஒற்றைச் செருப்பைக்
காணும்போதெல்லாம்.

வாழ்க பாரத மணித்திருநாடு!!

இந்தியா
என் தாய் நாடு!
இந்தியர்கள் என்
சகோதர சகோதரிகள்!

எல்லை தாண்டி
எதிரி நாடு தொடுவதினும்
பயங்கரம் ‍ எங்கள்
பாதசாரிகள்
பாதை கடப்பது!

அவசர ஊர்திகளின்
அபயக்குரல்
பண்பலைப் பாடல்களின்
சுருதி கலைக்க,
ஏற்றிக்கொள்வோம்;
கார் கண்ணடிகளையும்,
பாட்டொலியையும்.

முந்திச்செல்லும்
சகோதரிகளின்
வேகம் சகியாமல்
முட்டிச் செல்லும்‍சில
ஆண் கொம்புகள்!

இந்தியர்கள் என்
சகோதர சகோதரிகள்!

ஏதாவதொரு
சிக்னலில்
வாங்கிக் குத்திக் கொள்கிறோம்
தேசியக்கொடிகளை;
ஒவ்வொரு
சுதந்திர தினத்திற்கும்!

உதிராத நினைவுகள்


ஐந்து வயது நிலவாக‌
அம்மா அன்புக்கெதிரே
நடத்திய‌
உணவு மறுப்புப் போராட்டமும்,
அதன் பாசத்தோல்வியும்…

மேகலாவின் கரம் இணைத்து
பனிக்குளித்த மொட்டுக்களாய்
ஆடிய சேற்றுக்குளியலும்,
கிச்சுக் கிச்சுத் தாம்பூல‌மும்…

வீட்டுப்பாட‌ நேர‌த்தை
தொலைக்காட்சியில் தொலைத்து
க‌ண‌க்கு வாத்தியார் முன்
கொலைப்ப‌சுவாய் நின்ற‌தும்,
அவ‌ரின் ச‌த்த‌மான‌
பிர‌ம்பு முத்த‌ங்க‌ளும்…

ர‌ஜினி, க‌ம‌ல் திரையில் காத‌லிக்க‌
கதாநாய‌க‌ன் வேட‌மிட்டு
க‌டித‌த்தை எதிர் வீட்டு
ஜ‌ன்ன‌லிட‌ம் நீட்டிய‌தும்,
அதை அவ‌ள் அண்ண‌னிட‌ம் காட்டிய‌தும்…

ப‌ள்ளி வேளையில்
தியேட்டர் கியூவில் ம‌ல்லுக்க‌ட்டி
விய‌ர்வைக் குளிய‌லில்
பார்த்த‌ ப‌ட‌ங்க‌ளும்,
வ‌ருட‌க்க‌டைசியில் அணை‌த்த‌
பரீட்சைக் காய்ச்ச‌லும்….

பாஸ் செய்ய‌க் க‌ட‌வுளுட‌ன்
தேங்காய் உட‌ன்ப‌டிக்கைக் கையெழுத்திட்டு
க‌ல்லூரி ராகிங்கில் சட்டையின்றி ஓடிய‌தும்,
பெயர் கேட்க‌ப்போய்
அந்த‌ அக்காவின்
முறைப்பைச் சும‌ந்த‌தும்…

வான‌ம்பாடிக் கூட்ட‌மாய்
வாலிப‌ச்சோலையில்
வ‌ச‌ந்த‌துட‌ன் சந்தித்த‌
க‌ட‌லைப் பூக்க‌ளும்,
ச‌ந்தேக‌ம் கேட்டுச் சந்தித்த‌
வெள்ளை ம‌ன‌த்தோழிக‌ளும்…

ந‌ந்த‌வ‌ன‌த்திற்குச்
சொந்த‌மாய் வ‌ந்த‌‍‍ இந்த‌ ம‌ல‌ர்க‌ள்
கால‌க்காற்றில்
காய‌ம்ப‌டப் போவ‌தில்லை…
வாழ்க்கைச் சேற்றில் என்றும்
வாச‌மிழ‌க்க‌ப்போவ‌தில்லை.

துளிர்க்கும் சருகுகள்

முதல் சம்பள தின‌த்தில் தங்கையின்
“அண்ணா எனக்கு புது வாட்ச்” ம்,
தலை தீபாவளி விருந்தில் மாமனாரின்,
“ஸ்வீட் எடுத்துக்கங்க மாப்பிள்ளை” ம்,
சிணுங்கும் செல்ல மகனின்
“அப்பா ஸ்கூல் ல பிக்னிக்…” ம்,
எதிர் வீட்டு கல்லூரி மங்கையின்
“குட் மார்னிங் அங்க்கிள்” ம்,
ஆசை மகளின்
“எனக்கு ர‌வியை ரொம்ப பிடிச்சிருக்குப்பா” ம்,
காய்கறி கடைக்காரரின்
“எல்லாம் ஃப்ரெஷ் சார்” ம்,
ஆட்டோ இளரத்தத்தின்
“ஓரமாப் போ பெர்சு” ம்,
வாழ்க்கை துளித்துளியாய்
சருகாகிக் கொண்டிருப்பதை
சொல்லாமல்
சொல்லிக் கொண்டிருக்க,
நேற்று ரோட்டோரத்தில் கேட்ட‌
கல்லூரி நண்பனின்
“டேய் மாப்ள கணேசா”
மட்டும்
புதிதாய் சில துளிர்களை
தளிர்க்கச் செய்யும்.

ஞாபகச்சுவடு

நீ இருந்த வீட்டை
கடக்கும்போதெல்லாம்
என் நெஞ்சில்
நடந்து போகிறாய்;
ஞாபகமாய் உன்
பாதச்சுவடுகளை
என்னோடு
விட்டு விட்டு…

பக்தி

ஆண்கள் நிறைந்த பேருந்தில்
மல்லிகை வாசம்,
ஓட்டுனரின் பக்தி.

சாலையோரம்

எத்தனை முயன்றும்
என் வாகனச்சக்கரத்திலிருந்து
தவிர்க்க முடிவதில்லை…
முன் வாகனக் கூந்தலிலிருந்து
ச‌ட்டென உதிரும்
மல்லிகையை.

திரைச்சீலை முகங்கள்

அடுக்கு மாடி
புதுக்குடித்தனத்தில்
எல்லா முகங்களும்
அறிமுகமாயின;
நட்பு மட்டும்
திரைச்சீலைகளையே
அறிமுகப்படுத்தியது

தெரிந்த முகம் தேடி…

பேருந்தின்
ஜன்னல் முகம்,
ஆட்டோவின்
காற்றுச்சேலை,
பைக்கின்
பின்னிருக்கைத் துப்பட்டா,
தினம் தேடும்
கண்களுக்குத்
தென்படவில்லை இன்னும்;
பாதியில்
படிப்பை விட்டுச்சென்ற‌
கல்லூரித்தோழி!

கூரில்லா அம்புக‌ள்

வாகனக்
கண்ணாடிப் பலகைக‌ள்,
கழிப்ப‌‌றைச் சுவ‌ர்க‌ள்,
பூங்கா ம‌ர‌ங்க‌ள்;
தைக்கும் இட‌ம்விட்டு
எல்லா இட‌ங்க‌ளிலும்
தைத்துக் கிட‌க்கின்ற‌ன‌
காத‌ல் அம்புக‌ள்!

சனநாயகம்

வகைவகையான‌
பொம்மைகளுடன்
ஆடிக்கொண்டிருந்த
குழந்தையைப்
பார்த்துக்கொண்டிருந்த‌
சிறுமியை அழைத்து வந்து
சில பொம்மைகளைக் கொடுத்து
ஆடச்சொன்னாள் அம்மா!
பொம்மகளைத் திருப்பிக் கொடுத்த
சிறுமி கேட்டாள்,
“உங்க வீட்டுல சோறு இருக்கா?”

பிரார்த்தனை

நின்றிருந்த பெண்
தலையிலிருந்து விழுந்த‌
ரோஜாவை யாரும்
மிதித்து விடக்கூடாதென‌
வேண்டிக்கொண்டது மனம்,
கூடவே
மகளிர் இருக்கையில்
அமர்ந்திருக்கும் என்னை
யாரும் எழச்சொல்லக்
கூடாதெனவும்…

பெயர்க்குறிப்பு

ராமன், ராஜன்
மணி, மாதவன்
கிருஷ்ணன், தங்கராஜ்…
ஆண்பால் பெயர்களும்
இனிக்கின்றன;
அழகுப் பெண்களின்
அப்பா பெயராயிருக்கையில்!

கவிச்சித்திரம்

கவிதைக்
காகிதத்தில் ஓவியம்;
தவறி விழுந்த
மைக்கூடு!

Tuesday, February 17, 2009

அவன்களும் அவள்களும்

வைக்கப்படும்
எல்லாப்புள்ளிகளும்
கோலங்களாகி விடுவதில்லை.
சில,
கோலங்களுக்குள் சிக்கிக் கொண்டு…
சில,
கோலங்களுக்கு வெளியே…
சில புள்ளிகள் மட்டுமே
கோலத்தோடு கோலமாய்
கோலமாகவே மாறிவிடுகின்றன