Monday, January 8, 2018

இறுதிப்பாடல்

உங்கள் ஆறுதல் வார்த்தைகளை
வெளியே கழற்றிவைத்துவிட்டு
முதிர்ந்த நோயாளியின் அறைக்குள்
கவனமாக அடியெடுத்து வைக்கவும்.

அதீத இரைச்சல் கொண்டோ
அளவற்ற மௌனம் கொண்டோ
நோயாளியுள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
விவாதங்களைக் கலைத்துவிடாதீர்கள்.

சூன்யதிசையில்
தனியே நடந்துகொண்டிருக்கும் அவர்களை
உங்கள் இரக்கத்தின் குரல் மறிக்காதிருக்கட்டும்.

கயிற்று முறுக்கிலிருந்து பிரிபிரியாய்
பஞ்சாய் மாறிக்கொண்டிருப்பவர்களின் மீது
உங்கள் விசும்பலின் ஈரம்
சுமை ஏற்றாதிருக்கட்டும்.

கணக்குகள் சமன்படும் அந்த அறைக்குள்
உங்களுக்கான
இசைகோர்க்கப்படாத இறுதிப்பாடலின் வரிகளைத்
தடவிப் பார்த்துவிட்டுத்
திரும்புங்கள்
காத்திருக்கிறது உங்கள் வாகனம்.



எழுதிய நாள் : 29-நவம்பர்-2017

No comments:

Post a Comment