Wednesday, September 3, 2014

பிள்ளைச் சுயவதை

உன்னைப் பார்க்கவும்
உன்னுடன் பேசவும் வேண்டுமென்றிருக்கிறது
ஆனால் இப்போது மாட்டேன்.

என்னறைக்குள் சுழலும் வெப்பக்காற்றில்
நம் முத்தங்களும் கண்ணீரும்
திசையிலியாய்த் திரியட்டும்.

வார்த்தைகளின் பாதங்கள் அலைந்த
பிரியத்தின் வயல் நடுவே
மழைச்சாலையின் மைல்கல் போன்றதொரு
மோனத்தில் மண்டியிட்டுயிருக்க வேண்டுமெனக்கு.

என் குரல்வளை மீது ஊர்ந்துகொண்டிருக்கும்
இந்த மெளனத்தின் அழுத்தம்
அதி நிச்சயமாய்
என் விழிகளில் உடைந்துருளும்.

புண்ணளையும் குரங்கென
சுவர்களற்ற சுயவதைக்கூடத்தில்
நம் வாசனையால் பதப்படுத்தப்பட்ட
நாட்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்குள் சுற்றித்திரியும்
சிறுகுருவியின் சிறகுகள் உடைக்கட்டும்
நம்மைச் சேகரித்து வைத்திருக்கும்
கண்ணாடிச் சீசாவை.
சீசாத் துகளுடன் தெறிக்கும் கண்ணீர்த்துளிகளை
என் இறுகிய உதடுகள் சுவைக்கும்
அக்கணம் வரை
உன்னைப் பார்க்கவோ பேசவோ வேண்டாம் நான்.

பறவைக்குறிப்புகள்

பறவைகள் நதிபோல
தானே திாிகின்றன.
வெளியின் பாிமாணங்களையோ
தூரத்தின் சாயத்தையோ
சிறகுகளில் சேமிப்பதில்லை.

பறவைகளை எண்ணுதல் எளிதாயிருப்பதில்லை
ஒவ்வொரு பறவையும் மற்றொரு பறவையை
வரைந்து செல்கின்றது தன் சிறகுகளால்.

பாடல், அகவல், கூவல்
இவற்றைக்காட்டிலும்
சிறகசைப்பே
சிறந்த பறவை மொழியாகிறது.

உதிரும் சிறகுகளை
நினைவிற் கொள்வதில்லை பறவைகள்,
கவிதைகளோ நாட்குறிப்போ சுயசாிதையோ எழுதுவதில்லை,
குறிப்பாய் அவை
பறவைகளைப் போல வாழ நினைப்பதில்லை.

மழைச்சாலை உருவிலி

பொழி பொழியெனப்
பாெழியும் மழையில்
நெற்றியிலிருந்து
உப்பருவியாய் விழுந்தோடுகிறது
சற்றுமுன் வரை காய்ச்சிய வெய்யில்.

மழைக்காய் காத்திருந்த
யாரோ மூப்பன்
விட்டுச்சென்ற பாட்டொன்று
துளிா்க்கத்துவங்குகிறது என்னுதடுகளின் நடுவே.

என்னை உருவிலியாக்கி
விளையாடிக்கொண்டிருக்கும் மழையும்
மழையின் நிழலான மற்றொரு துளியும்
குற்றாறாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

மல்லிகை சுமந்தவளின்
மேல்துணியின் நுனியெடுத்து
பனித்திராட்சைகளைச் சிதறிச்செல்கிறது
என்னையும் அவளையும்
அணைத்துக் கடந்த காற்று.

வெயிலைச்சுமந்த தலைகள்
எங்கெங்கோ ஒண்டியிருந்தன
மழைக்கென சிறு மயிரைக்கூடக் காட்டாமல்.

சூலறுக்கப்பட்ட நதியொன்று
மீளட்டும் கட்டிடப்புதா் வழியே எனும்
ஆசையோடும் அச்சத்தோடும்
மழைக்கயிற்றின் தோல்பாவையாய்
இயங்கிக்கொண்டிருக்கிறேன்
நீண்டு கிடக்கும் கருந்திரையில்.

நிறைசூலி தோ்வெழுதுகிறாள்,
பிடிபடாத வினாத்தாளின் வேதனையை
உதைத்துத் தள்ளுகிறது
வயிற்றுள்ளிருந்து சிசு.