Friday, January 5, 2018

ஏழாம் நாள் காற்று

மிகுந்த மமதையுடன்
எரிந்து கொண்டிருக்கிறது
துரோகத்தின் தீ.

மடக்கிய முஷ்டிகளுக்குள்
வைராக்கியத்தின் வார்த்தைகளை மட்டுமே
வைத்திருந்தனர் எம் பிள்ளைகள்
அதில் வாட்களை
எங்கே கண்டீர் ஐயன்மீர்?

போர்க்களம் புதிதில்லை;
ஆனால் ஐயா,
கொண்டு வந்த வெள்ளைக்காகிதத்தில்
இரத்தத்தால் கிறுக்கி அனுப்பியிருக்கிறீர்கள்.

சூழ நின்றவர்கள்
எம் அண்ணன்கள் என்றே
அசராது நின்றன எம் கன்றுகள் .
உறவுகளை வேருடன் உலுக்கித் தள்ளியது
ஏழாம் நாள் காற்றில்
பரவிய விஷம்.

எம்குலத்தின்
குருடர்களைக் கொண்டே
குறி பார்த்துத் தாக்கினீர்,
அடுத்து நாங்கள்
அவர்களையும் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்.

முளைக்கும் தளிரினைக்
கிள்ளி எரிந்துள்ளீர்.
வெட்டிய இடம்
கிளைத்துத் துளிர்க்கும் என்பதை
படித்த நாங்கள் அறிவோம்,
நீங்களும் தெரிந்து கொள்வீர்கள்.

எரிந்து கொண்டிருக்கும் தீயினை
மண் பார்த்தது,
வான் பார்த்தது,
அவர்களும் பார்த்தார்கள்
நீங்களும் பார்த்தீர்கள்.
ஆனால் தோழர்களே
இது
மாற்றான் இட்ட தீயில்லை
நம் தோட்டக் காவலன் இட்ட தீ.
எரிந்து கொண்டேயிருக்கும்.
அணைந்து முடியும் நேரம் ,
அத்தனை கணக்குகளும்
சரி செய்யப்பட்டிருக்கும்.



மெரினாவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கெதிரான போராட்டத்தைக் கலவரமாக்கிக் கலைத்ததை முன்வைத்து….
எழுதிய நாள் : 26 ஜனவரி 2017


No comments:

Post a Comment