Friday, December 11, 2015

நதியே உன்னை...

வீதி தாண்டி வீட்டுக்குள் புகுந்தாய்,
வீட்டை மூழ்கடித்து
வீதியில் நிறுத்தினாய்,
அகதியாவதின் அவலம்
இரண்டே நாட்களில் சொல்லிப்போனாய்,
சாவும் ஒரு சம்பவமன
பிணமாக்கி உருட்டி விளையாடினாய்,
மலக்கழிப்பையும்
மாதக்கழிப்பையும்
கொடூரமாக்கினாய்.
இதுதான் நீ.
இது நீ ஆடிய தடம்,
சிறிது ஆடிப்போயிருக்கிறாய்.
போனால் போகிறது....
ஆனால்
எம் வீட்டுப்
பச்சைப்பிள்ளைகளை
வண்டிகளின் பின்னால்
கையேந்தி ஓடவைத்தாயே,
சண்டாளி
அதைத்தானடி
தாங்கிக்கொள்ள முடியவில்லை.