Monday, January 8, 2018

மழையின் நாள்

அந்த இரண்டு நாட்களுக்கிடையில்
மழையைத்தவிர வேறொன்றும் இல்லை
மழையின் றெக்கைக்குள்ளிருந்து
வந்து விழுந்ததுதான் அந்த நாள்
மழையெழுப்பிய சிறுகுன்றுகள் மீது
ஏறவியலாது விழுந்தன
பேசியிருக்க வேண்டிய வார்த்தைகள்
அந்த நாளின் மீது படர்ந்த ஒரு விதை
மழையின் பச்சை குடித்து
வேர்களில் வெம்மை கொண்டது
மற்றொரு மழை வந்து தூக்கிப் போகும் வரை
நேற்றும் ஆகாமல் நாளையும் ஆகாமல்
அது
அங்கேயே கிடக்கும் அந்த நாளாகவே
அந்த நாளின் மீது இடறும்
கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்
அதனுள் கிடக்கும்
தரப்படாத முத்தமும்
முளைத்துக்கொண்டிருந்த ஒரு கத்தியின் கூர்முனையும்.


எழுதிய நாள் : 20-ஜூன்-2017

No comments:

Post a Comment