Wednesday, August 15, 2018

நிலத்தடித்தாகம்

கீழும் மேலுமாய் ஊரும்
எறும்புகளின் கால்களில் பொடிகின்றன
குளத்தங்கரை ஓரத்தில்
நாம் செய்து வைத்த களிமண் சிலைகள்

காசு வைத்துப்பின்னிய மோதிரத்தின்
வண்ண நரம்பின் பின்னல்கள்
சாயமிழந்து தளர்ந்திருக்கின்றன

நிறைந்திருக்கும் பெட்டியின் அடியில்
மடிப்புக் கலையாத உன் மேலாடை
சாரம் குறைந்த உன் வியர்வை மணத்தோடு

பழகிய தடங்கள்
மங்கலானதின் பெரும்பாரம்
நுகத்தடித் திமில்களில் வதை கூட்டுகிறது.

கருப்புப்பறவை கொத்தித் தின்றது போக
மீதி விதைத் தானியங்கள்
வேர்விடக் காத்திருக்கின்றன
முத்தங்களின் ஈரத்தில்

வற்றிய குளத்துச் சேற்றில்
மூச்சைச் சேமிக்கின்றன
கடைசிச் சந்திப்பின் சொற்கள்

நிலம் மூடிய நீர்ப்பாதையின் வெம்மையைக்
கடக்கும் மேகங்கள்
தணிப்பதில்லை.

இன்மையை முழுமையாக்க
கொஞ்சம் வலுத்த காற்று
அல்லது
இன்னும் கொஞ்சம் எண்ணெய்யின் ஈரம்.

காத்திருக்கிறது
அரசமரத்தடி அகலின் சுடர்.





எழுதிய நாள் : 14-ஆகஸ்ட்-2018

No comments:

Post a Comment