Thursday, August 1, 2019

இரண்டு வரி வாழ்க்கை


இரண்டு வாக்கியங்களுக்கிடையே
நடந்துவிடுகின்றன எல்லாம்
முதல்வாக்கிய வெள்ளம்
அடுத்த வாக்கியத்தில் சேறு வெடித்துக்கிடக்கிறது.
பருவமெய்தியவள் தோல் சுருங்குகிறது
வாழ்ந்த வீடு தூரம் போகிறது
சிவந்த காயத்தின் மீது பொருக்கு படர்கிறது
காதலியின் காதோரம் நரைக்கிறது
யானைகள் ஊருக்குள் வருகின்றன
மெழுகிய குழிமீது தும்பை மணக்கிறது
கோர்த்த விரல்களில் அட்சதை அரிசி
வலசைப் பறவைகள் ஊர் திரும்புகின்றன
ஒரு சம்போகத்தின் வியர்வை உடைக்குள் மறைகிறது
காதல் கடிதங்கள் டெலீட் செய்யப்படுகின்றன
வளைந்த முள்நுனியில் செவுள்கள்
அசைவை நிறுத்துகின்றன
பிடித்த ஆசிரியர் நம் பெயரை மறக்கிறார்
வழியும் கண்ணீரோடு முத்தம் பரிமாறப்படுகிறது
ஒற்றையடிப்பாதையொன்று உருவானது.
இரு வாக்கியங்கள் கொண்ட ஓடையின்
ஒரு கரையிலிருந்து
இன்னொரு கரைக்குத் தாவித்தாவி
ஆடிக்கொண்டிருக்கிறது
காலம்.





எழுதிய நாள்  31 ஆகஸ்ட் 2018

No comments:

Post a Comment