Thursday, August 1, 2019

கதவுகள்

வெறும் சுவா்களை வீடுகளாய் மாற்றும் கதவுகள்
மூடப்படும் நேரத்தில்
ஒரு கதாபாத்திரமென உயிர்பெறுகின்றன.

மூடிய கதவுக்கு வெளியில் படுத்திருக்கிறது ஒரு வீதி
நகங்களுக்குத் தப்பிவிட்ட
இரையொன்றை எதிர்பார்த்தபடி

யாரையேனும் அழைத்துக்கொண்டேயிருக்கும்
மூடிய கதவுகளிலிருந்து கசிகின்றது
ஆப்பிள் மர இலைகளின் வாசனை.

அறைந்து மூடப்படும் கணத்தில்
ஊறத்தொடங்குகிறது
உள்ளிருந்தழிக்கும் ஆழ்ரணங்களின் நஞ்சு

பெருங்காரியவீட்டு ஷாமியானாவில்
தேங்கிநிற்கும் மழைநீா்
மூடிய கதவுக்கு வெளியே சொட்டிக்கொண்டிருக்கிறது.
நிலைப்படியில் உதிரும் உப்புத்துளிகள்
செதுக்கிய பூக்களின் அலங்காரச் சாயம்

கதவு திறக்கக் காத்திருக்கும்
கண்களின் சுரப்பிகளில்
கரையான்களின் சுவா்கள் உயா்கின்றன.

காய்ந்த புற்களின் வார்த்தைகளைக்
கோர்த்தபடி நிற்கும்
செவ்வக வடிவ இசைத்துணுக்கு அது.

படிக்கட்டுகளில் விழுந்து புரள்கிறது
வௌவால்களின் ஓலம்



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக 
எழுதிய நாள்  05 நவம்பர் 2018 

No comments:

Post a Comment