Wednesday, August 15, 2018

அகழிக்குள் முளைக்கும் ஆப்பிள் மரங்கள்

தன் வாலைக் கடிக்க முனையும்
நாயைப் போலவே
உன்னைத் தொட்டுவிடும் என் முயற்சி

சிலந்தியின் ஒற்றையிழையால் பிணைத்திருக்கிறாய்
என்னை
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்

நமக்கிடையே நீ
உருவாக்கிய அகழிக்குள்
முளைத்துக்கிடக்கின்றன
ஆப்பிள் மரங்கள்

கால்கள் பிணைக்கப்பட்ட கன்றினைப்போல்
உன் நிலத்தில்
இரண்டுகால் சுதந்திரத்தோடு
என்னை உலவவிட்டிருக்கிறாய்

எனக்குள் பூகம்பம்
நிகழும் நுண்நொடிக்குமுன்
குறுஞ்செய்தி சில நிமிடப்பேச்சு
ஏதோ ஒன்றினால்
என்னைச் சீர் செய்துவிடுகிறாய்
கவிதை, கண்ணீரின்றிக் காய்ந்துகிடக்கிறது
என் நாட்குறிப்பு

புற்களின் காட்டுக்குள்
சிற்றெறும்பென ஊரித்திரியும்
என் இதயத்துடிப்பை இறக்கவிடாது
குளிரறைக்குள் வைத்திருக்கிறாய்

கதவுகளற்ற சிறைச் சுவர்கள்
புலன்களைத் தொடவிடாது
என் கால்சங்கிலிகளுடன் திரிகிறேன்
உன் பெருங்கொடையான
சீசாச் சமுத்திரத்திரத்துள்.




எழுதிய நாள் : 11-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல்-2018 மாத இதழில் வெளியானது.

No comments:

Post a Comment