Wednesday, August 15, 2018

ஆற்றின் மொழி

வெள்ளம் ஆடிச்சென்ற மணற்சுழியுள்
பாதி நாட்களைப் புதைத்துக் கிடக்கிறது
என் நாட்குறிப்பு.
நாட்குறிப்பின் பக்கங்களின் மீது
ஆற்றின் அகன்ற சக்கரங்கள்
வரைந்த குறுமணல் ஓவியம்.
எழுத்துக்களை இழுத்துச்சென்ற ஆறு
வெற்றுப் பக்கங்களையும்
செந்நிறத்தில் முற்றுப்பெறாத சில
கவிதைகளையும் விட்டுச்சென்றிருக்கிறது.
ஆறடித்துச்சென்ற எழுத்துக்களை மீட்டு
பழைய சாயலில்
ஏதோ ஒன்றாய் முடித்துக்கொள்வேன்.
எழுதிய கவிதைகளை நிறைத்துவைக்க
மீண்டும் வருமா
அந்த ஆறு?


எழுதிய நாள் : 2013 ல் ஒரு நாள்

No comments:

Post a Comment