Wednesday, August 15, 2018

மரணம் தொடங்கும் கணம்

ஊர் முழுக்கச் சேதி சொல்லிவிட்டு
பழகிய வீட்டு நாய் போல
வாசலில்
கழற்றிய செருப்புகளுக்கு நடுவே
தண்மையாகப் படுத்துக்கொள்கிறது.
பூமாலைகளிலிருந்து சொட்டும்
நீர்த்துளிகளைத் தன்
வறண்ட நாவால் நக்கியபடி காத்திருக்கிறது.
ஓலங்களையும் கண்ணீரையும்
அரைக்கண் பார்வையால்
சுவாரசியமின்றிப் பார்க்கிறது.
இன்று சுமையான உடலை
தூர எறிந்து
கூட்டம் கலைந்து
பின்
கழுவிய கூடத்தில்
எரிகின்ற ஒற்றை விளக்கின்
சுடரிலிருந்து
வீடு முழுக்கப் பரவுகிறது
மரணம்.


எழுதிய நாள் :  2015ல் ஒரு நாள்

No comments:

Post a Comment