Wednesday, August 15, 2018

நிலத்தின் முதிய கண்கள்

நான் அங்கு போயிருந்தேன்
யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை
நான் அழைத்த பெயர்களுக்கு
யாரும் திரும்பிப் பார்க்கவில்லை
நாங்கள் வசித்த வீட்டில்
வேறு யாரோ இருந்தார்கள்
கனகாம்பரப் பூக்கள் உதிரும் தரை
சிமெண்ட் பூச்சால் சுத்தமாகியிருந்தது
வறட்டி ஒட்டிக் காயும் வேப்பமரங்கள் அங்கு இல்லை
கடைகளின் சாரைக்கடியில்
அந்த ஒத்தையடிப்பாதை புதைக்கப்பட்டிருக்கலாம்
நினைவுகள் வெளுத்துப்போன முதியவளின்
இடுங்கிய கண்களைக் கொண்டிருந்தது
அந்த நிலம்.
அடையாளங்கள் அற்ற அடையாளம் கொண்டிருந்த
ஏதோ ஓர் இடத்திலிருந்து
யாரோ ஒருவனாக வெளியேறிக்கொண்டிருக்கும்
என் மீது
ஏறி ஓடிக்கொண்டிருந்தது
அது.




எழுதிய நாள் : 09-ஏப்ரல்-2018

No comments:

Post a Comment