Wednesday, August 15, 2018

திரிந்த நிறமிகள்

நினைவுகளின் நிறமிகள்
திரிந்து போன நாட்களில் நீ வந்தாய்.
கூர்த்த சிலவற்றை மழுங்கச்செய்திருந்தேன்
வனத்தில் நீந்திய வேர்களைத்
தொட்டிகளுக்குள் அமிழ்த்தியிருந்தேன்
உன் அதிர்வுகள் பதிந்த நிலமிது.
உன் எச்சங்களைத் தேடி நீ வந்திருப்பாய்
உன்னை இழுத்துவந்த தாழம்பூ மணத்தால்தான்
என் அறைநாற்றம் போக்கிக்கொண்டிருக்கிறேன்.
உன்னிலிருந்து நான் வெகுதூரகாலம் விலகியிருக்கிறேன்.
நீ நீயாகவே இருந்தாய்
உன் பலத்தின் மீது என் பயம் இருந்தது
என் ஆயுதமும் இருந்தது.

உன் சிதைந்த தலையிலிருந்து இரத்தத்தோடு ஒழுகும்
நினைவுகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
மாறாபயத்தோடு.
பொழிகாட்டின் ஒற்றையடிப்பாதையென
நீண்டு கிடக்கும் உன்னைத்
தூக்கியெறியத் தவித்திருக்கிறேன்.

என்னை ஏளனம் செய்கிறாய்
சுழிக்கும் உதடுபோல்
அசையும் உன் வால் நுனியால்.




எழுதிய நாள் : 02-ஜூலை-2018

No comments:

Post a Comment