Friday, February 20, 2009

என்ன சொல்கிறாய்???


உன் கொலுசுச் சத்தம்
எனக்குப் பிடிக்கும்
என்பதால்- நீ
இப்போதெல்லாம்
என் முன்னால் நடப்பதேயில்லை…

உன் வீட்டுப்
பன்னீர்ப்பூக்களை நான்
ரசித்ததால்- அதன்
வேருக்கு
வெந்நீர் ஊற்றியவள் நீ
என் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்கிறாய்?

நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருக்கும்போது
நீயோ
சூரியனை உதயமாக்கி விடுகிறாய்;
என் கனவுகள் மட்டும்
அந்தரத்திலேயே
அஸ்தமித்து விடுகின்றன…

உன் பாதம்
கெட்டுப்போகாதிருக்க- நான்
பட்டுப்பூக்களை விரித்தேன்
ஆனால்
என் நினைவுகள்
கெட்டுப்போகவேண்டும்
என்பதற்காக
நீ
அமிலத்திலும் நடக்கத்
தயாராக இருக்கிறாய்.

உன் நினைவுகளை
மட்டும்
சுவாசித்த
என் நுரையீரல்
எடுத்து மருத்துவம் படிக்கிறாய்
என்
நெஞ்சுக்குள்
இப்போது மூச்சடைப்பு.

நான் என்ன
செய்தேன் உனக்கு?
நான் சாம்பலாக
வேண்டுமென்பதற்காக‌
நீயே எரிவதற்குத் தயாராகிறாய்?

சொல் தோழி,
பிளந்து கிடக்கும்
என் இதயக்காட்டில்
உன் பார்வைத்தூறல்
பட்டுவிட என்னை
என்ன செய்யச்சொல்கிறாய்???

1 comment: