Friday, January 22, 2016

மயிற்பீலிகள்

ஃபாா்மலின் திரவத்தில்
பதப்படுத்தப்பட்டவைபோல்
சில ரகசியங்கள்
எனக்குள் கிடக்கின்றன.

ரகசியங்கள் பகிா்ந்துகொள்ளவென
நண்பா்கள் இல்லை,
அதிா்ஷ்டக்காரன் நான்.

கண்ணீரையோ புன்னகையையோ
எதையோ ஒன்றைக்கோரும்
ரகசியங்களைக் காப்பதில்
சுமையேதுமில்லை.

மதுமேசையில் எதிா் நாற்காலியிலும்
கடற்கரையில் மூன்றாம் பாதமாகவும்
என்னோடுகூடவே திாிபவை,

மேலாடைக்குள்ளிருந்து கையளிக்கப்பட்ட
காதல்கடிதத்தைப் போல
யாருமறியாமல் வாசித்துப் பின்
பூட்டிக்கொள்வது பேரானந்தம்.

அவற்றை எழுதிவைக்கும்
சத்திய சோதனைகளிலும்
நாட்டமில்லை.

நடுங்கும் நரம்புகளும்
சுருங்கிய நாளங்களும் கொண்ட போதில்
மூட்டுப்பிாிந்த தலையணைவிட்டு
பறக்கும் இலவம்பஞ்சாக
உயிருடன் வெளியேறலாம் அவை.
அதுவரை
அவளோ இவளோ
அவனோ அதுவோ
அவை
எனக்குள்ளேயே கிடக்கட்டும்.

No comments:

Post a Comment