Wednesday, August 15, 2018

நிலத்தடித்தாகம்

கீழும் மேலுமாய் ஊரும்
எறும்புகளின் கால்களில் பொடிகின்றன
குளத்தங்கரை ஓரத்தில்
நாம் செய்து வைத்த களிமண் சிலைகள்

காசு வைத்துப்பின்னிய மோதிரத்தின்
வண்ண நரம்பின் பின்னல்கள்
சாயமிழந்து தளர்ந்திருக்கின்றன

நிறைந்திருக்கும் பெட்டியின் அடியில்
மடிப்புக் கலையாத உன் மேலாடை
சாரம் குறைந்த உன் வியர்வை மணத்தோடு

பழகிய தடங்கள்
மங்கலானதின் பெரும்பாரம்
நுகத்தடித் திமில்களில் வதை கூட்டுகிறது.

கருப்புப்பறவை கொத்தித் தின்றது போக
மீதி விதைத் தானியங்கள்
வேர்விடக் காத்திருக்கின்றன
முத்தங்களின் ஈரத்தில்

வற்றிய குளத்துச் சேற்றில்
மூச்சைச் சேமிக்கின்றன
கடைசிச் சந்திப்பின் சொற்கள்

நிலம் மூடிய நீர்ப்பாதையின் வெம்மையைக்
கடக்கும் மேகங்கள்
தணிப்பதில்லை.

இன்மையை முழுமையாக்க
கொஞ்சம் வலுத்த காற்று
அல்லது
இன்னும் கொஞ்சம் எண்ணெய்யின் ஈரம்.

காத்திருக்கிறது
அரசமரத்தடி அகலின் சுடர்.





எழுதிய நாள் : 14-ஆகஸ்ட்-2018

மரணம் தொடங்கும் கணம்

ஊர் முழுக்கச் சேதி சொல்லிவிட்டு
பழகிய வீட்டு நாய் போல
வாசலில்
கழற்றிய செருப்புகளுக்கு நடுவே
தண்மையாகப் படுத்துக்கொள்கிறது.
பூமாலைகளிலிருந்து சொட்டும்
நீர்த்துளிகளைத் தன்
வறண்ட நாவால் நக்கியபடி காத்திருக்கிறது.
ஓலங்களையும் கண்ணீரையும்
அரைக்கண் பார்வையால்
சுவாரசியமின்றிப் பார்க்கிறது.
இன்று சுமையான உடலை
தூர எறிந்து
கூட்டம் கலைந்து
பின்
கழுவிய கூடத்தில்
எரிகின்ற ஒற்றை விளக்கின்
சுடரிலிருந்து
வீடு முழுக்கப் பரவுகிறது
மரணம்.


எழுதிய நாள் :  2015ல் ஒரு நாள்

ஆற்றின் மொழி

வெள்ளம் ஆடிச்சென்ற மணற்சுழியுள்
பாதி நாட்களைப் புதைத்துக் கிடக்கிறது
என் நாட்குறிப்பு.
நாட்குறிப்பின் பக்கங்களின் மீது
ஆற்றின் அகன்ற சக்கரங்கள்
வரைந்த குறுமணல் ஓவியம்.
எழுத்துக்களை இழுத்துச்சென்ற ஆறு
வெற்றுப் பக்கங்களையும்
செந்நிறத்தில் முற்றுப்பெறாத சில
கவிதைகளையும் விட்டுச்சென்றிருக்கிறது.
ஆறடித்துச்சென்ற எழுத்துக்களை மீட்டு
பழைய சாயலில்
ஏதோ ஒன்றாய் முடித்துக்கொள்வேன்.
எழுதிய கவிதைகளை நிறைத்துவைக்க
மீண்டும் வருமா
அந்த ஆறு?


எழுதிய நாள் : 2013 ல் ஒரு நாள்

வெம்மை மணக்கும் காற்று

இலை தின்ற மரத்தின்
இலை தளிர்க்கையில்
கிளை மாறி அமர்கிறது காலம்

ஓடிக்கடக்கும் ரயிலின் சிறுபொழுது நிழல்
தண்டவாளத்தில் பரந்திருக்கும்
காய்ச்சல் தணிக்கும்.

ஈரம் உலர்ந்த துணிகள் கிடந்த
கயிற்றுத் தந்திகளில்
வெம்மை மணக்கும் காற்று இசைக்கிறது
தனிமையின் பாடலை

இறுகக் கட்டிய
நார் முடிச்சுகளில் திறக்கும் மொட்டுகள்
வண்டுகளுக்கு அனுப்புகின்றன
புது முகவரியை

மண்ணைத்தொட்ட விழுதுகளில்
கடந்த காற்றின்
வியர்வைப் படிவு.

காக்கைகளின் திறந்த வாய்களில்
பசியாற்றிக் கொள்ளும்
கூரைப் பருக்கைகள்

வடிவங்களைத் தூர்த்துப் பாயும்
நீர்மையாம்
தகிக்கும் பசி.



எழுதிய நாள் : 30-ஜூலை-2018

நிறம்


இரவுக்கு வேறு வேறு நிறம்
கவிதைக்கு வேறு வேறு அர்த்தம்
காட்சிக்கு வேறு வேறு மொழி
ஒன்றும் இன்னொன்றும்
வேறு வேறு இல்லை.




ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 26-ஜூலை-2018

காலத்துகள்கள் வழியும் மணற்குடுவை





கோப்பைகளை நிறைத்த குடுவை
காற்றால் நிறைந்திருக்கிறது.

காலத்துகள்கள் வழியும் மணற்குடுவை
காத்திருக்கிறது
இன்னும் சிலமுறை
நிரம்புவதற்கும் காலியாவதற்கும்

நிறைதலும் குறைதலும்
பெரும்பழத்தின் இரு கீற்றுகள்

திருப்பப்படும் மணற்குடுவையின்
ஒரு நுண்மைப்பொழுதில்
இல்லாது
இருக்கிறது காலம்

கடந்தவற்றை உறிஞ்சிய பஞ்சுப்பொதி
காற்றின் மிதவெப்பத்தில்
எடை உதறிக்கொள்கிறது

வாகனம் வந்து சேர்வதற்குள்
காட்சிகளின் புகைமூட்டத்திலிருந்து
விலகி
சிறிது மூச்சு வாங்கிக் கொள்வதே
இளைப்பாறல், பிழைப்பு.


ஜெயேந்திரராஜனின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 11-ஜூலை-2018

திரிந்த நிறமிகள்

நினைவுகளின் நிறமிகள்
திரிந்து போன நாட்களில் நீ வந்தாய்.
கூர்த்த சிலவற்றை மழுங்கச்செய்திருந்தேன்
வனத்தில் நீந்திய வேர்களைத்
தொட்டிகளுக்குள் அமிழ்த்தியிருந்தேன்
உன் அதிர்வுகள் பதிந்த நிலமிது.
உன் எச்சங்களைத் தேடி நீ வந்திருப்பாய்
உன்னை இழுத்துவந்த தாழம்பூ மணத்தால்தான்
என் அறைநாற்றம் போக்கிக்கொண்டிருக்கிறேன்.
உன்னிலிருந்து நான் வெகுதூரகாலம் விலகியிருக்கிறேன்.
நீ நீயாகவே இருந்தாய்
உன் பலத்தின் மீது என் பயம் இருந்தது
என் ஆயுதமும் இருந்தது.

உன் சிதைந்த தலையிலிருந்து இரத்தத்தோடு ஒழுகும்
நினைவுகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன்
மாறாபயத்தோடு.
பொழிகாட்டின் ஒற்றையடிப்பாதையென
நீண்டு கிடக்கும் உன்னைத்
தூக்கியெறியத் தவித்திருக்கிறேன்.

என்னை ஏளனம் செய்கிறாய்
சுழிக்கும் உதடுபோல்
அசையும் உன் வால் நுனியால்.




எழுதிய நாள் : 02-ஜூலை-2018

மெய்ம்மைகளின் நாளை




புறமொதுக்கப்பட்ட மெய்ம்மைகளின்
குவியம் மங்கிய முகங்களின் மீது
நிற்கிறது
நகல்களின் அரியணை
இரண்டு பிக்சல்
கூடுதலாக வீசியெறிந்து
நகல்களின் பிரதிகளை நிலைப்படுத்தலாம்
சில்வர் நைட்ரேட்டின்
புகைமூட்டத்தினிடையே எழும்
மெய்மைகளின் குரல் மீது
ஏறி இறங்குகிறது
மறதியின் நாளை.



நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 25-ஜூன்-2018

பற்கள்

யார் சாயலைக் கண்டாளோ
என்னைக் குவிந்து பார்த்திருந்தவள்
நான் தான்
நாற்றம் பிடித்த என் அறையின்
இருட்டு மூலை வரை
இழுத்து வந்துவிட்டேன்
அவள் உடலை.




எழுதிய நாள் : 10-மே-2018

குறி வெளிச்சம்

இந்த வாழ்க்கையில் எனக்குக்
குறை ஏதுமில்லை
கனவுகண்டு பிள்ளைபெற்று
சீரியலில் அழுது திரைப்படம் பார்த்து
புடைவை நகை சேர்த்து
முத்தம்வாங்கி முத்தமிட்டு
சமைத்துப்போட்டு சண்டையிட்டு
தோல் சுருங்கி நரைவிழுந்து
தள்ளாது போய்
எப்படியோ எங்காவது
ஒரு பெண்ணாக வாழ்ந்து
செத்துப்போகிறேன்.
ஆசிட் ஊற்றி
தெருவில் கழுத்தை அறுத்து
தீயுடலோடு அணைத்து
வாயில் உள்ளாடை திணித்து வன்புணர்ந்து
வெற்றுடம்பாய் வீசியெறிந்து
இருட்டுக் கோயிலுக்குள் புணர்ந்து கொன்று
புகைப்படச் செய்தியாக்கி
மெழுகுவர்த்தியேற்றி
உங்கள் குறி
உருவாக்கும் எந்த வெளிச்சமும்
தேவையில்லை எனக்கு.


எழுதிய நாள் : 2017ல் பெண்கள் வன்கொடுமை பற்றிப் புழுங்கிக்கொண்டிருந்த ஒரு நாள்

நிலத்தின் முதிய கண்கள்

நான் அங்கு போயிருந்தேன்
யாருக்கும் என்னை அடையாளம் தெரியவில்லை
நான் அழைத்த பெயர்களுக்கு
யாரும் திரும்பிப் பார்க்கவில்லை
நாங்கள் வசித்த வீட்டில்
வேறு யாரோ இருந்தார்கள்
கனகாம்பரப் பூக்கள் உதிரும் தரை
சிமெண்ட் பூச்சால் சுத்தமாகியிருந்தது
வறட்டி ஒட்டிக் காயும் வேப்பமரங்கள் அங்கு இல்லை
கடைகளின் சாரைக்கடியில்
அந்த ஒத்தையடிப்பாதை புதைக்கப்பட்டிருக்கலாம்
நினைவுகள் வெளுத்துப்போன முதியவளின்
இடுங்கிய கண்களைக் கொண்டிருந்தது
அந்த நிலம்.
அடையாளங்கள் அற்ற அடையாளம் கொண்டிருந்த
ஏதோ ஓர் இடத்திலிருந்து
யாரோ ஒருவனாக வெளியேறிக்கொண்டிருக்கும்
என் மீது
ஏறி ஓடிக்கொண்டிருந்தது
அது.




எழுதிய நாள் : 09-ஏப்ரல்-2018

நாம்

என் மாளிகையில் ரகசியங்கள்
நிறைந்திருக்கின்றன.
அனைத்தும் நீங்கள் ஒப்படைத்துச் சென்றவை
என்னுடைய ரகசியங்கள்
மெல்ல நிறம் மாறி உங்களுடையதாகிக் கொண்டிருக்கின்றன.
உங்கள் ரகசியங்களும் என்னுடையவையும்
நிறங்களை மாற்றிக்கொண்டு
நமது ரகசியங்களாகிவிட்டன இப்போது.
நாம் எல்லோரும்
ஒரே நிறத்தவரானோம்.
வாருங்கள் கொண்டாடுவோம்
நம்மில் யாரும் கெட்டவரில்லை
நல்லவருமில்லை.



எழுதிய நாள் : 2017ல் எப்போதோ 😊

பிரிகை




வண்ணம் எங்கும் ஒன்றே.
சிவப்பென்றும் பழுப்பென்றும் ஓலமென்ன?!
கருப்பு துப்பிய எச்சத்தின் பிரிகைதானே
நான்
நீ
கடவுள்.


நண்பர் சுடலைமணியின் ஒளிப்படத்திற்காக
எழுதிய நாள் : 29-ஜனவரி-2018

ஒரு வார்த்தை கவிதை

பாதி மட்டுமே எழுதப்பட்ட
கவிதை இருந்தது என்னிடம்
நெடுநாட்களாய்.
இவள் முத்தம்
அவள் வியர்வை
மரணம்
மாத்திரை
கொலை
கடிதம்
கொண்டாட்டம்
இத்தனையும் சேர்ந்து
வேறொரு புள்ளியில் நிறுத்தியிருக்கின்றன
கவிதையை இப்போது.
இன்னும் ஒரு வார்த்தைதான்
தேவையாயிருக்கிறது
கவிதை நிறைவதற்கு…





எழுதிய நாள் : 27-ஜனவரி-2018

பெருமீன்கள் உலரும் கரை

மெட்டி விரல்களை அலைகள் நனைக்க
கடல் பார்த்து நின்று கொண்டிருக்கிறாள்.
உதட்டில் படியும் உப்புக்காற்றில்
வேறொரு எச்சில் சுவையின் ரேகைகள்.
கண்களின் சுரப்பியை உறிஞ்சிய
மேகம் கருஞ்சூலியான பொழுதில்
ஒரே நிறம்
ஒரே மொழி
ஒரே சுவை
கடல் அவள் வானம்.
நிலவின் செதில்களைப் புடைக்கும் அலையில்
காட்சிப்பிழையாய் தூரப் படகொளி.
பெருமீன்கள் உலரும் கரையில்
வெற்றுத்தூணாய் நிற்கிறாள்
திசையின் தீயை அணைத்து.


எழுதிய நாள் : 24-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல் 2018 இதழில் பிரசுரமானது

தொலைந்த நாள்

அந்த நாள்தான் எங்கோ தொலைந்துவிட்டது
அதனோடு அந்த முதல் வார்த்தையும்.
அவளிடம் அந்த நாள் பத்திரமாக இருக்கிறதென்றாள்.
ஆனால்
எனக்கும் அவளுக்கும் அந்த நாள் வேறுவேறாயிருந்தது.

கடந்தவைகளின் மாயப் புதிரறையில்
உள்ளிழுத்த வாசல்தேடி
ஒவ்வொரு நாளாய்த் திறந்து பார்க்கிறேன்.

காலத்தின் நிழற் சிதிலங்களுக்குள்
அலைந்தலைந்து 
வேறு நாட்களின் கண்ணிகளில் சிக்கிக்கொள்கிறேன்.

இரைபிடிக்கும் பல்லியின் நாக்கு
குவியும் கணத்திற்கு முந்தைய கணத்தில்
உருமாறிப் பறக்கிறது அந்த நாள்.

எப்படியாவது அந்தநாளைப் பிடித்து
அவளைப் பார்த்த முதல்பொழுதைச் 
சிறிது கலைத்துவிட்டால் போதும்.
இந்த வார்த்தைகளையும் சேர்த்து
ஆணிகள் பதியாச் சுவராயிருக்கும்
நிகழ்கணம்.


[புதிரறை=Maze]

எழுதிய நாள் : 22-ஜனவரி-2018

புகைப்படத்தில் ஊரும் எறும்புகள்

இடுப்பு வரை தெரியும்
உன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் கட்டில் பொழுதின் எறும்புகள்
படத்தின் மீது ஊர்கின்றன
காமத்தின் காய்ந்த பாகினைக் கால்களில் சுமந்தபடி.
படத்தின் மேலடுக்கிலிருந்து வெளியேறும்
உன் வியர்வையின் படலத்துள்
அமிழ்ந்து போகிறது இந்த நொடி.
நடுங்கும் அனலோடு
உன்னுதட்டு வாசத்தைப் பறித்துக்
கோர்க்கின்றன என் விரல்கள்.
கண்களுக்குள் ஒளிரும்
வெட்கப்பரல்களைத் தொடும் பொழுதில்
உயரம் குறைந்து ஒளிப்புள்ளியின்
ஒற்றையருவியாகிறேன்.
வேரகழ்ந்த மரத்தின் விழுதுகளில்
அறுந்த கண்ணிகள்
நட்சத்திரச் சங்கிலியாய்த் துளிர்க்கின்றன.


எழுதிய நாள் : 19-ஜனவரி-2018

அகழிக்குள் முளைக்கும் ஆப்பிள் மரங்கள்

தன் வாலைக் கடிக்க முனையும்
நாயைப் போலவே
உன்னைத் தொட்டுவிடும் என் முயற்சி

சிலந்தியின் ஒற்றையிழையால் பிணைத்திருக்கிறாய்
என்னை
நெருங்கவும் விடாமல்
விலகவும் விடாமல்

நமக்கிடையே நீ
உருவாக்கிய அகழிக்குள்
முளைத்துக்கிடக்கின்றன
ஆப்பிள் மரங்கள்

கால்கள் பிணைக்கப்பட்ட கன்றினைப்போல்
உன் நிலத்தில்
இரண்டுகால் சுதந்திரத்தோடு
என்னை உலவவிட்டிருக்கிறாய்

எனக்குள் பூகம்பம்
நிகழும் நுண்நொடிக்குமுன்
குறுஞ்செய்தி சில நிமிடப்பேச்சு
ஏதோ ஒன்றினால்
என்னைச் சீர் செய்துவிடுகிறாய்
கவிதை, கண்ணீரின்றிக் காய்ந்துகிடக்கிறது
என் நாட்குறிப்பு

புற்களின் காட்டுக்குள்
சிற்றெறும்பென ஊரித்திரியும்
என் இதயத்துடிப்பை இறக்கவிடாது
குளிரறைக்குள் வைத்திருக்கிறாய்

கதவுகளற்ற சிறைச் சுவர்கள்
புலன்களைத் தொடவிடாது
என் கால்சங்கிலிகளுடன் திரிகிறேன்
உன் பெருங்கொடையான
சீசாச் சமுத்திரத்திரத்துள்.




எழுதிய நாள் : 11-ஜனவரி-2018
மணல்வீடு காலாண்டிதழ் ஏப்ரல்-2018 மாத இதழில் வெளியானது.

Friday, March 9, 2018

இணைச்சொல்


என் வாழ்த்து இல்லாமலும் நீ கொண்டாடுவாய்
என் கைகள் தொடாமலும் உன் கண்ணீர் காயும்
என் நதி பாயாமலும் உன் தோட்டம் பூக்கும்
அணுச்சுழற்சி வேகத்தில்
எதிர்த்திசைப் புள்ளிகளின் அமைவிடம்
எனதுமாகும்
உனதுமாகும்
உன் வரிகள் இல்லாமலும் என் பாடல் ஒலிக்கும்
உன் வியர்வை படாமலும் என் கூடல் அமையும்
உன் கண்ணீர் காணாமலும் என் ஊர்வலம் நிகழும்
அந்தச் சொல்
இல்லாமலும்
இந்தக் கவிதை முடியும்.







எழுதிய நாள் : 10-01-2018

என் உருவங்கள்


என் சித்திரத்தை வரைவதில்
சிரமமேயில்லை
அவர்களுக்கு.

பல பெயர்களில்
பல நிறங்களில்
பல வாசனைகளில்
பல வடிவங்களில்
அவரவர் கைகளில்
என் உருவம்.

உதட்டச்சும்
செருப்புத்தடமுமாய்
அவர்களின் நாற்றத்தையும் நிறத்தையும்
பதிகிறார்கள்
என் உருவத்தின் மீது.

ம்...
கருப்போ வெள்ளையோ
அவர்கள்
என் சித்திரத்தை
வரைந்து கொண்டேயிருக்கிறார்கள்
பிதாவே.




எழுதிய நாள் : 09-01-2018

வெம்மைப் புகை (அ) வாழ்த்துகள்


உனக்கும் எனக்குமென
நான் வனைந்து வைத்திருந்த நாளின் பிரதியில்
நின்றுகொண்டிருந்தாய் வேறொருவனோடு

எளியதும் துரதிர்ஷடமானதுமான
ஓர் உறவுச் சொல்லால் அறிமுகப்படுத்தினாய்
என்னை அவனிடம்

தோள் மாலைக்கடியிலும்
அடர்நிற உதட்டுச் சாயத்திலும்
நசுங்கிக்கிடந்தன
என் முத்தத்தின் தடங்கள்

அவசரமாய் நிகழ்ந்துவிட்ட
நம் கூடலின் வெம்மை
அலங்கார விளக்குகளின் ஜொலிப்பில்
நிம்மதியாய் மூழ்கிப்போயிருந்தது

மருதாணி பூசிய ரேகைகளுக்குள்
நொடிப்பொழுது வாழ்ந்துவிட்டு
உதிரமற்ற புன்னகையுடன் வெளியேறுகிறேன்
உங்களைத் தாங்கிய ஃப்ளெக்ஸ் போர்டைக் கடந்து

நீ பொய்த்த சத்தியங்களால் தகிக்கும்
என்னறையின் இன்றைய இரவில்
பழைய நாட்குறிப்பொன்றின்
காமம் வீசும் பக்கங்கள் மீது
பல்லிகள் புணர்ந்திருக்கும்.




எழுதிய நாள் : 08-01-2018
 

சொல்


சொற்களால்
நிறைந்திருக்கிறது வாழ்க்கை
என்ற சொல்லும்.



எழுதிய நாள்: 6-1-2018

நீர்மையின் நிறம்

ஒரு குடம் நிறைய
வெள்ளையாய்
நிரம்பியிருக்கிறது
ஒரு துளி விந்து

Monday, January 8, 2018

உருமாறும் தழும்புகள்

இரவல் சொற்கள் நிறைந்த பாடலாய்
அறைச்சுவரில்
தொங்கிக்
கொண்டிருக்கிறது
கண்ணாடி

நானோ
வேறு யாரோ பதிக்கும் முகங்களை
நொடிகளில் கழுவிடும்;
நினைவுகளைத் தூக்கிச்செல்லாத
சட்டகத்து ஆறு.

சில உருவங்களை மட்டும்
கண்ணாடிகள் உதிர்ப்பதில்லை
ஒட்டுப்பொட்டுகளின் பசையழுக்கைப் போல.

உருமாறும் தழும்புகளென பிம்பங்கள்
எப்போதும் அதனில்.

ஒளியில்லா இரவுகளில்
தனிமையின் அனந்த மலர்ச்சியை
இருள்வனத்துள் இசைத்தபடியிருக்கும்.

பிரதிபலிப்பது
சலிப்படைந்த நாளில்
மெல்லத் தன் ரசத்தை உதிர்க்கத் தொடங்கும் கண்ணாடி
ஓய்வுநாளில் உறங்கும் பரத்தையின் முகத்தில்
தன்னைப் பார்த்துக்கொள்ளும்.




எழுதிய நாள் : 13-டிசம்பர்-2017

இறுதிப்பாடல்

உங்கள் ஆறுதல் வார்த்தைகளை
வெளியே கழற்றிவைத்துவிட்டு
முதிர்ந்த நோயாளியின் அறைக்குள்
கவனமாக அடியெடுத்து வைக்கவும்.

அதீத இரைச்சல் கொண்டோ
அளவற்ற மௌனம் கொண்டோ
நோயாளியுள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
விவாதங்களைக் கலைத்துவிடாதீர்கள்.

சூன்யதிசையில்
தனியே நடந்துகொண்டிருக்கும் அவர்களை
உங்கள் இரக்கத்தின் குரல் மறிக்காதிருக்கட்டும்.

கயிற்று முறுக்கிலிருந்து பிரிபிரியாய்
பஞ்சாய் மாறிக்கொண்டிருப்பவர்களின் மீது
உங்கள் விசும்பலின் ஈரம்
சுமை ஏற்றாதிருக்கட்டும்.

கணக்குகள் சமன்படும் அந்த அறைக்குள்
உங்களுக்கான
இசைகோர்க்கப்படாத இறுதிப்பாடலின் வரிகளைத்
தடவிப் பார்த்துவிட்டுத்
திரும்புங்கள்
காத்திருக்கிறது உங்கள் வாகனம்.



எழுதிய நாள் : 29-நவம்பர்-2017

புனிதத்தீ

அத்தனை துளைகளிலிருந்தும்
ஒழுகிக் கொண்டிருக்கிறது மனம்
கருப்புக் கண்ணாடியால் கண்களை அலங்கரிக்கிறேன்
நெஞ்சின் குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொள்கிறேன்
விரல்முனைகளில் தீயின் குட்டிகள் நெளிகின்றன
மணமூட்டியணிந்த வார்த்தைகளுக்குள்ளே
நெறிக்கும் காமம் காத்திருக்கிறது.
இறைப்பாசுரங்களைப் பாடியபடி திரிகள் ஏற்றப்படுகின்றன
விட்டில்களை மறுத்து முகம் திருப்பித் திரும்புகின்றன சுடர்கள்
விளக்கின் அடியிருட்டுக்குள் பதுங்கியிருக்கிறது அது
திரியின் புனிதம் போற்றுதும்
விட்டிலின் பிணங்களைத் தூற்றுதும்.



எழுதிய நாள் : 28-நவம்பர்-2017

எண்களின் மரம்

அவளுக்கு எண்களைப் பிடிப்பதில்ல
எண்ணிக்கையில் எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை
பிறந்த தேதிகளும் நினைவிலிருப்பதில்லை
செங்கோடையில் பிறந்தவன் நீ
தண்பனியில் பிறந்தவள் நான் என்பாள்
அவள் மச்சங்களை நான் எண்ணுகையில்
பறவைகள் நட்சத்திரங்களை எண்ணுவதில்லை என்பாள்
அந்த நீண்ட முத்தத்தின் பின்
இருபது நிமிட முத்தம் என்றேன்
மழையைத் துளிகளால் அளக்காதே என்றாள்
எத்தனை நாட்கள் தனித்திருந்தோம்?!
என்ற என் ஆயாசக் கேள்விக்கு
நமக்கிடையே ஓங்கிப் பெருத்த மரம் இருந்தது
எனச் சொல்லிய அவள் பெருமழையானாள்.
பறவை உயரே பறக்கத் தொடங்கியது.
ஒரு விதையாய்ச் சுழிந்து ஒடுங்கியது
எண்களின் மரம்.


{டிசம்பர் மாத அச்சாரம் இதழில் பிரசுரமானது}

எழுதிய நாள் : 20-நவம்பர்-2017

நூல் கொலை

எத்தனை பேரைக் கொலை செய்வாள் அவள்?
படிப்பு ஒன்றே வாழ்க்கை என்று சொன்ன அப்பனை
பெரிய கனவுகளைத் தின்று ஊட்டிய அண்ணனை
அவள் சுடர் வாங்கி ஓடக் காத்திருந்த இளம் திரிகளை
பாதி வரை ஆட்டத்தில் சேர்க்காத மனுவின் பிரதிகளை
ஓடிய கால்களை இடறிய தந்திரப் புனிதர்களை
தூண்டில் திருடும் கஞ்சி வேட்டிப் புழுக்களை
செய்தித்தாள்களில் அழுது மறக்கும் என்னை உன்னை
மாற்றுப் பாதையில் அலுவலகம் சேரும் உன்னை என்னை
இன்னும் இன்னும் இன்னும்……
நாற்கரச் சாலைகளையொத்த நீண்ட பட்டியல்
அவளுக்குத் தெரிந்ததை மட்டும் செய்து வந்தாள்
இன்று
அவளால் இயன்றதை மட்டுமே செய்தாள்
ஆம்
அவளால் அத்தனை பேரையும் கொல்ல முடியாது.


நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 05-செப்டம்பர்-2017

அனிதா

என்ன பாப்பா நீ
இப்படிச் செஞ்சுட்ட?

நீதிமன்றத்து மொதப்படியில நீ நின்ன,
தெம்பாயிருந்தோம்.
காலுல சிக்குன அந்த நூல
அறுத்தெறிஞ்சிருவன்னு இருந்தமே
கழுத்த நெறிச்சிருச்சே பாப்பா.

வெள்ளக் கோட்டுக் கனவெல்லாம்
கருப்புப் போஸ்டரா ஒட்டிக் கெடக்குதே பாப்பா
இப்படிக் கருப்புச் சேதியா வர்றதுக்கா
அம்புட்டுக் கனவு?!

நாங்கெல்லாம் சொரணை கெட்டவிங்கன்னு
தெரிஞ்சு போச்சா ஒனக்கு?
ரோஹித்துக்கும் முத்துக்கிருஷ்ணனுக்கும்
நாங்க என்ன செஞ்சோம்னும்
தெரிஞ்சு போச்சு ஒனக்கு
அப்படித்தான பாப்பா?

ஒம்மேல நம்பிக்கையில்லாம
நீ செத்துட்டன்னு சொல்றாய்ங்க.

நீ மாண்டுக்கிட்டது
எங்க மேல நம்பிக்கையில்லாமத்தான பாப்பா?

நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய அனிதாவின் மரணம் தந்த வலி.

எழுதிய நாள் : 02-செப்டம்பர்-2017

மீதமிருக்கும் கதை

இன்னும் ஒரே ஒரு கதைதான் மீதமிருக்கிறது
என் பிற கதைகள் அத்தனையும் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்
அதை நான் சொல்லும்போது
உங்கள் கண்களில் எனது நிறம் வேறொன்றாய் மாறும்
உங்களைச் சுற்றியோடும் காற்றின் வெப்பம் வேறுபடும்
அந்தக் கதையை
விஷம் கலந்த மதுவை நாம் பருகிக் கொண்டிருக்கும்போதோ
சர்க்கஸ் துப்பாக்கியை உங்கள் கையில் கொடுத்த பின்னரோ
உங்கள் கல்லறை மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தவாறோ
நான் சொல்வேன்.
நிலைக்கண்ணாடியின் பளபளப்பு வார்த்தைகள் கொண்ட
அக்கதையை
எப்போது சொல்லவேண்டுமென முடிவெடுத்துக்கொள்ளுங்கள்
ஏனென்றால்
அது உங்கள் கதைதான்.




எழுதிய நாள் : 04-ஜூலை-2017

ஆயுதம்

என் ஆத்ம நண்பர்களே
யாரும் யூதாஸாய் மாறி
என் கன்னத்தில் முத்தமிட வேண்டாம்
என் கோப்பையில்
ஹெம்லாக்கை புன்னகையுடன் பரிமாறவேண்டாம்
கற்பனை மீறிய ஆயுதங்களோ
இயல்புக்கு மீறிய தந்திரங்களோ தேவையில்லை.
வந்தமர்ந்து என் தோள்களில்
கைபோட்டு அணைத்துக் கொள்ளுங்கள்
அற்புதமான உங்கள் புன்னகையை
என் அறை முழுக்கப் பரவவிடுங்கள்
நான் மெல்ல உங்கள் தோள்களில் சாயும்போது
சிகரெட் சாம்பலைத் தட்டிவிடுவது போல்
உறங்கிக் கொண்டிருக்கும் தொட்டில் குழந்தையை
கிள்ளி விடுவது போல்
எனக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியின் திரியை
மெல்லக் கிள்ளி விடுங்கள்
அது ஒன்றே போதும்
என்னை இயல்பாகக் கொல்வதற்கு.




எழுதிய நாள் : 29-ஜூன்-2017

படிமம்

ஆணியில்
தொங்கவிடப் பட்டிருந்த
செவ்வக வானத்தில்
அந்தப் பறவை
பறந்துகொண்டிருக்கிறது
அதே நாளின் வெளிச்சத்தோடு...


எழுதிய நாள் : 28-ஜூன்-2017

காலத்தின் பிசின்

நத்தையூர்ந்த மணல்தடத்தில்
குமிழ்ந்தூறும்
என்றோ புதைந்த முத்தங்கள்

ஆவியாகாத முத்தப் பொழுதுகளின் ஈரம்
பிசினாய் சுரக்கும்
பச்சையம் இற்ற கிளைகளில்

கருநாக விஷத்தின் அதிதூய்மையுடன்
ஒரு முத்தம் உறைந்திருக்கிறது
படிமமாய்க் கிடக்கும் ஆதிமனிதனின் உதடுகளில்

அருகில் இல்லாத போதில்
காற்றில் உதிர்க்கப்பட்ட முத்தங்கள்
மகரந்தம் பூசிய கால்களால்
காற்றில் வரைகின்றன உதட்டுக் கோடுகளை

இறுக்கிப்பிணைத்த விரல்களுக்கிடையில்
சத்தமின்றி கடத்தப்படுகிறது
முத்தம் ஒன்று.

பரிசுத்தமான ஒரு முத்தம்
உதடுகளில் இருக்கிறது
இன்னும் தரப்படாமலே



எழுதிய நாள் : 24-ஜூன்-2017

பரிமாணங்கள்

பிம்பங்கள் பதியாப் பார்வை
காலத்தை எரிக்கும் ஆழப்பெருமூச்சு
கறுத்த மௌனம்
பார்வை கலைத்தெறியும் தலையசைப்பு
சொற்களை நகரவிடாத விரல்களின் இறுக்கம்
ஏதாவதொன்றில்
கணத்தைக் கரைத்துக்கொண்டேயிருக்கிறது மனம்
கண்ணீர் ஒன்றே அழுகையில்லை.


எழுதிய நாள் : 21-ஜூன்-2017

நினைவின் தடம்

பூக்கள் உதிர்ந்து கிடக்கும்
மரத்தடியில்
மௌனமாக நிற்பவன்
பழைய பாதையொன்றில்
நடந்து கொண்டிருக்கிறான்.



எழுதிய நாள் : 21-ஜூன்-2017

மழையின் நாள்

அந்த இரண்டு நாட்களுக்கிடையில்
மழையைத்தவிர வேறொன்றும் இல்லை
மழையின் றெக்கைக்குள்ளிருந்து
வந்து விழுந்ததுதான் அந்த நாள்
மழையெழுப்பிய சிறுகுன்றுகள் மீது
ஏறவியலாது விழுந்தன
பேசியிருக்க வேண்டிய வார்த்தைகள்
அந்த நாளின் மீது படர்ந்த ஒரு விதை
மழையின் பச்சை குடித்து
வேர்களில் வெம்மை கொண்டது
மற்றொரு மழை வந்து தூக்கிப் போகும் வரை
நேற்றும் ஆகாமல் நாளையும் ஆகாமல்
அது
அங்கேயே கிடக்கும் அந்த நாளாகவே
அந்த நாளின் மீது இடறும்
கால்களில் ஒட்டிக்கொள்ளக்கூடும்
அதனுள் கிடக்கும்
தரப்படாத முத்தமும்
முளைத்துக்கொண்டிருந்த ஒரு கத்தியின் கூர்முனையும்.


எழுதிய நாள் : 20-ஜூன்-2017