Wednesday, August 15, 2018

வெம்மை மணக்கும் காற்று

இலை தின்ற மரத்தின்
இலை தளிர்க்கையில்
கிளை மாறி அமர்கிறது காலம்

ஓடிக்கடக்கும் ரயிலின் சிறுபொழுது நிழல்
தண்டவாளத்தில் பரந்திருக்கும்
காய்ச்சல் தணிக்கும்.

ஈரம் உலர்ந்த துணிகள் கிடந்த
கயிற்றுத் தந்திகளில்
வெம்மை மணக்கும் காற்று இசைக்கிறது
தனிமையின் பாடலை

இறுகக் கட்டிய
நார் முடிச்சுகளில் திறக்கும் மொட்டுகள்
வண்டுகளுக்கு அனுப்புகின்றன
புது முகவரியை

மண்ணைத்தொட்ட விழுதுகளில்
கடந்த காற்றின்
வியர்வைப் படிவு.

காக்கைகளின் திறந்த வாய்களில்
பசியாற்றிக் கொள்ளும்
கூரைப் பருக்கைகள்

வடிவங்களைத் தூர்த்துப் பாயும்
நீர்மையாம்
தகிக்கும் பசி.



எழுதிய நாள் : 30-ஜூலை-2018

No comments:

Post a Comment