Wednesday, August 15, 2018

புகைப்படத்தில் ஊரும் எறும்புகள்

இடுப்பு வரை தெரியும்
உன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நம் கட்டில் பொழுதின் எறும்புகள்
படத்தின் மீது ஊர்கின்றன
காமத்தின் காய்ந்த பாகினைக் கால்களில் சுமந்தபடி.
படத்தின் மேலடுக்கிலிருந்து வெளியேறும்
உன் வியர்வையின் படலத்துள்
அமிழ்ந்து போகிறது இந்த நொடி.
நடுங்கும் அனலோடு
உன்னுதட்டு வாசத்தைப் பறித்துக்
கோர்க்கின்றன என் விரல்கள்.
கண்களுக்குள் ஒளிரும்
வெட்கப்பரல்களைத் தொடும் பொழுதில்
உயரம் குறைந்து ஒளிப்புள்ளியின்
ஒற்றையருவியாகிறேன்.
வேரகழ்ந்த மரத்தின் விழுதுகளில்
அறுந்த கண்ணிகள்
நட்சத்திரச் சங்கிலியாய்த் துளிர்க்கின்றன.


எழுதிய நாள் : 19-ஜனவரி-2018

No comments:

Post a Comment